Pages

Sunday, May 8, 2011

பிரியமுள்ள கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு


நான் இன்னும் இருபதை எட்டாதவன். கைக்கு கிடைத்த புத்தகங்களை படித்து " மார்க்ஸியம் என்றால் என்ன? அதன் இலட்சியம் என்ன? அதன் தேவை என்ன?" போன்ற அடிப்படையை மட்டும் தெரிந்து வைத்திருக்கும் சாமான்ய இளைஞன். பொதுவாகவே கம்யூனிஸ்ட் என்றால் மார்க்ஸ், ஏங்கல்ஸ்,லெனின்.ஸ்டாலின்,மா சே துங் காஸ்ட்ரோ இவர்களைத்தாண்டி எவரும் என் நினைவுக்கு வருவதில்லை.கம்யூனிஸத்தின் சாதனைகள்,வெற்றிகள்,எல்லாம் சோவியத்திலும் கியூபாவிலும் மட்டுமே நடந்தாக நம்பிக் கொண்டிருந்தவன் நான்.எனக்கு மட்டும் அல்ல இங்கு பலரது நிலைமை இதுதான்.சமீபத்தில் படித்த சில புத்தகங்கள் சில பெரும் தலைவர்களை அடையாளம் காட்டியது. சிங்காரவேலர்,ஜீவா,வி.பி.சிந்தன்,பி.இராமமூர்த்தி,எ.எம்.எஸ், ஜோதிபாசு, சங்கரய்யா என அந்த நீண்ட பட்டியலை வாசிக்கும் போது உண்மையிலேயே இவ்வளவு பேர் இந்தியாவில் கம்யூனிஸ கொள்கையை உள்வாங்கி அதற்காகவே தங்கள் வாழ்வை அர்ப்பணித்தவர்களா? என ஆச்சரியம் என்னைத் தொற்றிக்கொள்கிறது. தல்வார் போராட்டம்,தெலுங்கானா புரட்சி என படித்த போது மெய்சிலிர்த்துப் போனேன்.தோழர் பாலுவின் தூக்குமேடை நிமிடங்களிலும் அவரது கொள்கைப்பிடிப்பு வீச்சுரைகளால் உணர்ச்சிமேலீட்டில் என் கண்களில் இருந்து நீர் வழிந்தது.அது அழுகை அல்ல என்பதை மட்டும் நன்றாய் உணர்ந்திருந்தேன்.

                                        "வெள்ளைக்காரன் சுதந்திரம் தர நினைக்கும் போது மூன்று கட்சள் தான் இருந்தன. முதலவதா வந்த காங்கிரசுக்கு இந்தா இந்தியா என்றான்.இரண்டாவதாக் வந்த முஸ்லீம் லீக்கிற்கு இந்தா பாகிஸ்தான் என்றான்.மூன்றாவதாய் வந்த கம்யூனிஸ்ட்டுக்கு இந்தா சிறைச்சாலை என்றான்".என்றும் ஜீவா முதலானோர் ஒழிந்து மறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்ததைப் பற்றியும் எங்கள் ஊர் டீக்கடியில் அமர்ந்து சில தோழர்கள் பேசியதை கேட்டிருக்கிறேன்.அவ்வளவு முன்னரே வந்துவிட்ட கட்சி ஏன் இன்னும் வளரவில்லை?என்ற கேள்வி இயல்பிலேயே மனதில் எழும் ஆனாலும் அது குறித்து தீவிரமாக் யோசிக்கும் வயது அப்போது எனக்கு இல்லை.

                   எட்டு மணி நேரம் மட்டுமே வேலை, ஞாயிறு விடுமுறை,சாப்பாட்டுக்கு இடைவேளை,போனஸ்,சம்பள உயர்வு என பலவற்றை சாதித்த கம்யூனிஸ்ட் கட்சியை தொழிலாளர்கள் தூக்கி கொண்டாடாமல் இருப்பதற்கு காரணம் என்ன?. ஒருசமயம் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு வளர்ந்திருந்த கட்சி இப்படி நொடிந்து போனது ஏன்? எல்லாவற்றுக்கும் ஒரே பதில் தான் நாம் அந்நியப்பட்டு போய்விட்டோம் தோழர்களே.இன்னும் நாம் பலரது கண்களுக்கு டப்பா குலுக்கிகளாகவே தெரிகிறோம். ரத்தன் டாட்டா எல்லா கட்ச்சிகளுக்கும் பணம் அனுப்பிய போது "இது ஏழையின் கட்சி உனது முத்லாலித்துவ பணம் வேண்டாம்"என் திருப்பித் தந்தது கம்யூனிஸ்ட் கட்சி என்று தோழர்கள் மார்த்தட்டி சொல்வது உண்டு.நமது கொள்கைகளைப் பற்றி பணக்காரர்களுக்கு புரியவைப்பதில் வெற்றி அடைந்திருக்கும் நாம் அதை ஏழைகளிடம் கொன்டு சேர்ப்பதில் பெரும் தோல்வி அடைந்திருக்கிறோம்.உங்களுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை கட்சிக்குள் இருக்கும் பலருக்கே கம்யூனிஸ சித்தாந்தததில் சரியான புரிதல் இல்லை.களப்பணி ஆற்றுவது மிகவும் முக்கியமெனினும் சித்தாந்தத்தில் தெளிவில்லாமல் களப்பணி ஆற்றுவது என்பது சரியானது அல்ல.முன்பு போல் இல்லை இப்போழுது பெரும்பாலானோர் தங்கள் சுயநலத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.பொதுநல எண்ணத்தோடு வரும் சொச்சப் பேரையாவது சரியான வழியில் திருப்பிவிடுவது நமது கடமை ஆகும்.எது நமது சித்தாந்தம் என்பதிலேயே நமக்கு குழப்பம் இருக்கிறதோ எனப்பயப்படுகிறேன்.

  
                  "இந்த கம்யூனிஸ்டுகளுக்கு வேற வேலையே இல்ல இங்குட்டு நெல்லு வெலய ஏத்தும்பாய்ங்க.... அங்குட்டு அரிசி வெலய குறைன்னுவாய்ங்கே..." என்று என் விவசாயி மாமா சொல்லுவார்.விவசாயிகளிடம் இருந்து அரசாங்கம் அதிக விலைக்கு நெல்லை வாங்கி அதை அரிசியாய் மக்களுக்கு விநியோகிக்கும் போது குறைந்தவிலைக்கு விநியோகிக்கவேண்டும் என்ற கோரிக்கை அவரது நன்மைக்காத் தான் என்பதை அவர் அறீயவில்லை.அது அவரது தவறல்ல நமது தவறு.நாம் யாருக்காக போராடுகிறோமோ அவரே எதிரணியில் இருக்கும் போது நமது போராட்டங்கள் எல்லாம் வீணாய்த்தான் போகும்.இனிமேல் தலைவர்களாய் கூடிகூடிப் பேசுவதை விட்டு வெளியே வாருங்கள்.இரகசிய கூட்டங்கள் நடத்தியே நமது கொள்கைகள் எல்லாவற்றையும் இரகசியம் ஆக்கிவிடாதீர்கள்.

                   ஈழவிசயத்தில் நாம் நடந்து கொண்டவிதம் நம்மை புரிந்துகொண்ட சில அறிவாளிகளுக்கு நம்மீது இருந்த மதிப்பை குறைத்துள்ளதாகவே படுகிறது.ஈழவிசயத்தில் மார்க்ஸிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு சரியா? எங்கே எந்த இனம் ஒடுக்கப்பட்டாளும் அதற்கு குரல் கொடுப்பது தானே முறை.அங்கே சிங்களவனை தமிழன் நசுக்கிக்கொண்டிருந்தால் சிங்களவனின் பக்கம் தான் மார்க்சியவாதி நிற்க வேண்டும். அவன் எந்த இனம் என்பது பிரச்சனையில்லை.எங்கே எவன் ஒடுக்கப்பட்டாலும் அவனுக்கு சார்பாய் நிற்பதுவே கம்யூனிசம் என்றே நான் புரிந்துவைத்துள்ளேன்.நீங்கள் தமிழர் என்பதால் இப்படி பேசுகிறீர்கள் என விவாதம் செய்தால் உண்மையிலேயே அது சிறுபிள்ளைத்தனமானது.
  
                                     நமது தேர்தல் கூட்டணியும் கூட நமது மதிப்பை குறைத்து விடுகிறது.தி.மு.க், அ.தி.மு.க ஆகிய கட்சிகளுக்கு ஓட்டு சேர்த்தே நம்து மதிப்பை நாம் கெடுத்துக்கொண்டோம்.காங்கிரசையும் அதன் கூட்டான தி.மு.க வையும் எதிர்க்கும் பொருட்டு அ.தி.மு.க் வில் இருக்கிறோம். அ.தி.மு.க பா.ஜா.க வுடன் கூட்டு சேர்ந்தால் அதை முறியடிக்கும் பொருட்டு தி.மு.கவுக்கு வருவோம்.ஒரு திருடனை தடுக்க இன்னொரு திருடனுடன் கூட்டு சேர்கிறோம். பிறகு அந்த திருடனைத் தடுக்க மறுபடியும் பழைய திருடனுடன் கூட்டு சேர்கிறோம். இதற்கு ஊரை எழுப்பிவிட்டு இரண்டு திருடர்களையும் அடையாளம் காண்பிப்பதுதான் நல்ல வழி. நமது கட்சிக்கு பதவி ஆசை இல்லை என்பதை பலமுறை நிருபித்துள்ளோம்.இன்னும் ஏன் ஓட்டு அரசியலில் இருக்கவேண்டும்.ஓட்டு அரசியலை விட்டு விலகி மக்களுக்கான ஒரு மாபெரும் இயக்கமாக மாறினால்.மக்களே நம்மை மீண்டும் ஓட்டு அரசியலுக்கு அழைத்து ஆட்சியை தருவார்கள்.அன்று உண்மையிலேயே இந்தியா ஒளிரும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...