Pages

Monday, May 9, 2011

"ஐ லவ் யூ...' சொல்லி விட்டேன்.

நான், ஆசிரியர் பயிற்சி படித்து முடித்துள்ளேன்; நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன். ஒரு அக்கா மற்றும் ஒரு தம்பி இருக்கின்றனர். நான் ஆசிரியர் பயிற்சி படிக்கும் போது, முதலாம் ஆண்டின் ஆரம்பத்திலேயே, ஒரு அழகான பெண்ணை பார்த்து, "ஐ லவ் யூ...' சொல்லி விட்டேன்.
அந்தப் பெண், எனக்கு பக்கத்து வகுப்பு; அவளும், ஆசிரியர் பயிற்சி படித்தாள். அந்தப் பெண், தன் பெற்றோரிடம் பேசும்படி கூறினாள். அதற்கு பிறகு, நாங்கள் பார்த்து கொள்வதுமில்லை; பேசுவதுமில்லை. என்றாவது ஒருநாள் பார்த்தாலும், பழைய நினைவுகள் வரவில்லை. விளையாட்டாக, "ஐ லவ் யூ...' கூறியதாக நினைத்து, சென்று விட்டேன்.
நான் கல்லூரிக்கு அடிக்கடி லீவு எடுப்பேன். இறுதியாண்டு தேர்வு வந்தது. தேர்வின் போது, அந்த பெண், தானாக வந்து என்னிடம் பேசினாள்; என்னை விரும்புவதாக கூறினாள். இரண்டு பேரும், அன்றிலிருந்து மனதார நேசித்தோம். சிறகடித்து வானில் பறந்து கொண்டிருந்தோம். அந்த பெண், என்னை விட வசதியானவள்.
முதலில் என் வீட்டில், என் காதல் பற்றி, அம்மாவிடம் கூறினேன். அம்மா திட்டினார், ஒத்து வராது என்று கூறினார். எனக்கு, அந்த பெண் தான் வேண்டுமென்று என் அம்மாவிடம் கூறினேன். கொஞ்ச நாள் கழித்து, என் காதல் விவகாரம், என் அப்பாவிற்கு தெரிந்து விட்டது; அவர் ஒன்றும் கூறவில்லை. ஏனென்றால், என் அப்பாவும், அம்மாவும் காதல் திருமணம் செய்தவர்கள்.
என் அக்காவிற்கு திருமண ஏற்பாடுகள் நடந்தன. அப்போது, அந்த பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்து, என் அப்பா, அம்மாவிடம் சம்மதம் வாங்கினேன். என் அக்கா திருமணத்திற்கு வந்து. ஒரு வாரம் எங்கள் வீட்டில் தங்கினாள். நாங்கள் அனைவரும், குடும்பத்தோடு சந்தோஷமாக இருந்தோம்.
சிறிது நாட்களில், அவளது பெற்றோர், அவளுக்கு வேறொரு மாப்பிள்ளை பார்த்தனர். இனியும் பொறுமையாக இருக்கக் கூடாது என்று, எங்கள் காதலை தன் பெற்றோரிடம் கூறியிருக்கிறாள். அவர்கள், அவளை கடுமையாக அடித்து, எங்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அன்றிலிருந்து அவள், சரிவர சாப்பிடாமல், தூங்காமல் இருந்திருக்கிறாள்.
அவளின் பெற்றோர், அவளை பிரபல சாமியாரிடம் அழைத்துச் சென்று, வசியம் செய்து, அவள் படுக்கைக்கு அடியில் தேங்காய், எலுமிச்சை பழம் மற்றும் திருநீறு வைத்து விட்டனர். அந்த நாட்களிலும், அவள் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, "என்னை இங்கிருந்து அழைத்துச் சென்று விடு...' என்று கேட்டுக் கொண்டாள்.
ஓடி போய் திருமணம் செய்வது, பெற்றோருக்கு அவமானம் என்று எண்ணி, வேண்டாம் என்று சொல்லி விட்டேன். என் பெற்றோர், "அவளை பெண் கேட்க வருகிறோம்...' என்று, தொலைபேசியில் கூறிய போது, "வேண்டாம்...' என்று கூறி விட்டனர் அவளின் பெற்றோர்.
அவள் மனதை மாற்றி, பணக்கார வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசையை விதைத்தனர் அவளின் பெற்றோர். எனவே, அந்த பெண் என்னிடம், "நல்ல வருமானத்தில் வேலை பார்க்க வேண்டும்; குறிப்பாக, அரசு பணியில் இருக்க வேண்டும்...' என்று கூறினாள்; ஆதலால், அதற்கும் நான் முயற்சி செய்தேன்.
அவளுடைய பெற்றோர், "நீ கிறிஸ்தவ உடையார், நாங்கள் கிறிஸ்துவ - முத்துராஜா... ஜாதி விட்டு ஜாதி பெண் கொடுக்க மாட்டோம்...' என்று கூறி விட்டனர். அந்த பெண்ணுக்காக, உயிரையும் விட துணிந்தேன். இப்போது, ஐந்து மாதமாக, அவள் பேசுவதே இல்லை. இன்றும், அவளை என் மனைவி போல் நினைத்து, வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இந்த ஐந்து மாதத்தில், வேறொரு பெண், என்னை காதலிப்பதாக கூறினாள்; நான் ஏற்றுக் கொள்ளவில்லை.
இக்கடிதம் எழுதுவதற்கு ஒரு மாதத்திற்கு முன், நான் காதலித்த பெண் வேண்டும் என்று, வேளாங்கண்ணிக்கு மாலை போட்டு, பாத யாத்திரை சென்றேன்; கடவுள் எனக்கு கண் திறக்கவில்லை. பதினைந்து நாட்களுக்கு முன்பாக, அவளை ஒரு சர்ச்சில் பார்த்தேன். அவள், என்னைப் பார்த்ததும், வேகமாக சென்று விட்டாள். அவள் முகத்தில் எவ்வித உணர்வுகளும் இல்லை; அது, எனக்கு வருத்தமாக இருந்தது.
நாங்கள் விரும்பிய காலத்தில், அவள் மீது நூறு சதவீதம் பாசமாக இருந்தேன் என்றால், அவள் என் மேல், இருநூறு சதவீதம் பாசமாக இருந்தாள். ஏன் இப்படி மாறிவிட்டாள் என்று தெரியவில்லை; ஆனால், என்னால் மாற முடியவில்லை.
நான் இப்போது, பிரபலமான பால் நிறுவனத்தில், பொறுப்புள்ள உயர் பதவியில் இருக்கிறேன்.
அந்த பெண் எனக்கு கிடைப்பாளா? அவளை மறக்க என்னால் முடியவில்லை. என் மனம் ஒரு நிலையாக இல்லை. எங்கள் காதல், ஊர் மக்கள் அனைவருக்கும் தெரியும். அவள் மனதில் என்ன உள்ளது என்று எனக்கு புரிய வையுங்கள்.




நீதி கேட்டு தாக்கல் செய்த, ஒரு முறையீட்டு மனு போலிருந்தது உன் கடிதம். அதுவே, உன் கண்ணியமான காதலுக்கு சாட்சி. உனக்குள்ளும், அவளுக்குள்ளும், ஒரு பூவைப் போல காதல் மலர்ந்திருக்கிறது. மூத்தவர்கள், கள்வெறி கொண்ட குரங்கு போல், பூவின் இதழ்களை பிய்த்தெறிந்து விட்டனர்.
நூறு சதவீதம் காதலை கொட்டிய உன் மீது, இருநூறு சதவீதம் காதலை கொட்டிய பெண், தற்சமயம், பாராமுகம் காட்டுகிறாள் இல்லையா? அது, ஏன் என்று யோசித்தாயா மகனே?
நீ முதன் முதலில், "ஐ லவ் யூ...' சொல்லும் போதே அவள், "பெற்றோரிடம் பேசுங்கள்...' என்றாள். பெற்றோரை முழுக்க, முழுக்க சார்ந்து நிற்பவள் அவள். உனக்கும், அவளின் பெற்றோருக்கும், கயிறு இழுக்கும் போட்டி ஒன்று நடந்தது; நடுவில் உன் காதலி. போட்டியில், உன் காதலியை தங்கள் பக்கம் இழுத்து போட்டு விட்டனர். ஒவ்வொரு யுக்தியாய் முயற்சி செய்து, உன் காதலியின் மனதை மாற்ற முயற்சி செய்தனர் அவள் பெற்றோர். தொடர் யுக்திகள், உன் காதலியை வீழ்த்தி விட்டன.
உன் காதலி, மிக மிக நல்லவள்; ஆனால், சூழ்நிலைக் கைதி. நல்லதோ, கெட்டதோ, பெற்றோர் சொல் கேட்பது, குழந்தைகள் கடமை என நினைத்து விட்டாள். அவள் இடத்தில் நீ இருந்தாலும், இதைத் தான் செய்திருப்பாய்.
ஒவ்வொரு வெற்றி பெற்ற ஆணின் இதயத்திலும், காதல் தோல்வி எலும்புக் கூடுகள் கட்டாயம் காணக் கிடைக்கும். காதல், ஒரு மனிதனை கவிஞனாக்கும், காதல் தோல்வியோ, அவனை சாதனையாளனாக ஆக்கும்.
இறைவன் மகத்தானவன். உனக்கு என்ன கொடுப்பதென்று அவனுக்குத் தெரியும். உன் காதலை தோற்கடித்தவர்களுக்கு, நீ ஒரு மிகப்பெரிய தண்டனை வழங்கலாம். எப்படி தெரியுமா?
வாழ்க்கையில் பல படிகள் முன்னேறி, இன்னொரு சிறப்பான பெண்ணை கைப்பிடித்து, உண்மையான கிறிஸ்தவனாக நீ திகழும் போது, உன்னை நிராகரித்தோர் புலம்புவர். மதவெறி, ஜாதி வெறி பிடித்து, ஒரு மாணிக்கத்தை பறிகொடுத்தோமே என்று.
"நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் ரட்சிக்கப்படுவான்; அவன் உள்ளும், புறமும் சென்று மேய்ச்சலை கண்டடைவான்...' என்கிறார் கர்த்தர். நடப்பவை எல்லாம், கர்த்தர் நாட்டம் என நம்பு.
உன் காதலியை மணந்து கொள்ள, புதிய முயற்சிகள் மேற்கொள்ளாதே; காத்திரு. மனந்திருந்தி, பெண் வீட்டார் வந்தால் சரி. இல்லாவிட்டால், அப்பெண்ணுக்கு திருமணமாகும் வரை காத்திரு. அவளது திருமணத்திற்குப் பின், உன் வீட்டார், உனக்கு பெண் பார்த்து, திருமணம் செய்து வைக்கட்டும்.
வாழ்க்கையில் எல்லா பிரச்னைகளுமே, நகரும் மேகங்கள். மேகங்கள் நகர்ந்து, இளஞ்சூரியன் கண்ணுக்கு புலனாகும். ஆகையால், நாளைக்காக கவலைப்படாதிருங்கள். நாளைய தினம், தன்னுடையவைகளுக்காக கவலைப்படும்.

1 comment:

  1. சூப்பர் பதிவு
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...